கும்பகோணத்துடன் ஸ்ரீபகவத்பாத சங்கரரின் தொடர்பு : ஒரு ஆய்வு (இரண்டாம் பகுதி)

காலடி – பெயர்க்காரணம்

ஸ்ரீசங்கரர் பிறந்த ஊருக்குக் ‘காலடி’ எனப் பெயர். இப்பெயர் பிற்காலத்தில் ஏற்பட்ட காரணப்பெயர் எனலாம்.

சிவரஹஸ்யம் போன்ற சில பண்டைய நூல்களில் சங்கரர் பிறந்த ஊருக்கு “சசாலம்” அல்லது “சாலக்கிராமம்’ ” எனப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசங்கரருக்குப் பகவத்பாதர் என்ற சிறப்புப்பெயர் உள்ளது. இதற்கு ‘ஈசனடி’ என்று பொருள். ஈச்வராம்சமாகப் பிறந்தவரின் அடிச்சுவடு பட்டதால் புனிதம் பெற்றதாலேயே அவ்வூருக்கு ‘காலடி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். காலடி என்பதும் ஒரு தமிழ்ப் பெயராகத்தான் தோன்றுகிறது.

சிவபுரத்தில் ஸ்ரீசங்கரரின் மூதாதையர்

ஸ்ரீசிவகுருவின் தகப்பனாரின் முன்னோர்கள் கும்பகோணத்தை அடுத்த சிவபுரவாசிகளாக இருந்திருக்கக் கூடும். அதனாலேயே, ஸ்ரீசிவகுருவின் பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு, ‘சிவகுரு’, என்று தங்கள் மூதாதையரின் ஊரான குடந்தையை அடுத்துள்ள சிவபுரத்தின் ஈசனார் ஸ்ரீசிவகுருநாதரின் பெயரைச் சூட்டியுள்ளனர். (2/3)