ஸ்ரீசங்கர விஜயம் – 4

ஸ்ரீசங்கர விஜயம்

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

துறவு

மகனுக் கோர்மணம் செய்வித்து மகிழ மனத்திற் கொண்டாள் மாதா ஆர் யாம்பிகை;

சங்கர ரோவெனில் சந்நியாசம் ஏற்கச் சந்தர்ப்ப மொன்றைச் சடுதிகைக் கொண்டார்;

தாயும் மகனும் தனிநீ ராடுகையில்

சேயின் காலையோர் முதலை பிடித்தது;

அலறினாள் தாயும், அழுது துடித்தாள்; பதறினாள் அங்கே பயமிகக் கொண்டு ;

“சந்நியாச ஆச்ரமம் சங்கரன் ஏகற்கு

அன்னை விடைதந்தால் அகலும் சங்கடம்;

கவலைப் படாதீர் கண்ணீர் விடாதீர்; முதலையின் வாக்கிது முடிவைச் சொல்லுவீர்”

எனவே பகர்ந்தார் இளைஞர் சங்கரர் ;

“அப்பா மகனேஎன் அருமைச் செல்வமே!

இப்போ துனைநான் பிரிந்தெங்ஙன் வாழ்வேன்?

உன்னைத் தவிர உறுதி வேறுண்டோ?

தன்னந் தனியாய்த் தவிக்கவே விடாதே!”

என்று வருந்தினாள் ஏங்கியே தாயும்;

ஒன்றிய தாயின் சொற்கேட்டுச் சங்கரர்

“வருந்தாதீர், அம்மா! வேறுதுணை இலையென;

அருந்தவப் பயனும் அவலமே யாகாது; அன்னைக் குரிய அந்திக்கன் மங்களைச் சொன்ன முறைப்படி நிச்சயம் செய்வேன்;

சன்மார்க்க வழியில் சந்நியாசம் ஏற்கச்

சடுதியி லெனக்கு விடைதந் திடுவீர்”

எனவே புகல, மனமிளகித் தாயும்

புத்திரன் பிழைத்தால் போதுமென் றெண்ணி

உத்தரம் தந்தாள் உதவினள் துறவு. (4/20)

ஸ்ரீசங்கர விஜயம் – 3

ஸ்ரீசங்கர விஜயம்

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

கனகதாரா ஸ்தவம் இயற்றியது

குருகுல வாசம் செய்யுமந் நாளில்

ஒருசிறு சம்பவம் நிகழ்ந்தது கேளீர்;

அந்தணர் ஒருவர் அவர்மிக ஏழை,

உஞ்ச விருத்தியில் உயிர்வாழ்ந்து வந்தார்;

பிரம சரிய முறையின் படியே

நிர்மல சங்கரர் பிக்ஷை யேற்க

அந்தணர் இல்லம் அருகில் நின்றார்;

வந்தனள் மறையோன் மனையாம் நங்கை

பவப்பிணி நீக்கும் பாலன் முகத்தைத் தவப்பெரும் பயனால் கண்டு களித்தாள்;

அவசர மாகவே அகமெங்கும்

ஓடினாள் ;

பிக்ஷைய ளிக்கப் பக்ஷணம் ஒன்றும்

தக்ஷணம் காணாது தவியாய்த் தவித்தாள்;

நெல்லிக் கனியொன்று கையிற் கிடைத்ததை

மெல்லியல் அன்புடன் இட்டனள் பிக்ஷையாய்

அய்யன் கண்டான் அவள்தன் அன்பை; மெய்யான கருணை மிகக்கொண்டான் உடனே;

அந்தணர் தம்பதியை ஆட்கொண்ட வறுமையை

அப்பொழுதே போக்கிட ஆர்வம் கொண்டான்.

மனத்திலே நினைந்தான் மகாலக்ஷ்மி யன்னையை

கணமதே சொரிந்தான் கனகதா ராஸ்தவம்

தங்கக் கனிகள் பொழிந்தன அங்கே ; பொங்கிய செல்வம் பொலிந்தது இல்லம்.(3/20)

சோழர் கல்வெட்டில் பகவத்பாதீயம் சாரீரகபாஷ்யம்

டாக்டர்.குடவாயில் பாலசுப்ரமணியன்

சோழமாதேவி ஸ்ரீகயிலாயமுடையார் கோயிலில் வீரராஜேந்திர சோழன் காலத்தில் ஸ்ரீசங்கர பகவத்பாதர்களின் ப்ரஹ்ம ஸூத்ரபாஷ்யம் – பகவத்பாதீயம் என்னும் சாரீரக பாஷ்யத்திற்கு ப்ரதீபகம் ஆகிற வார்த்தீகம் வக்காணிக்கப்பட்டதைக் குறிப்பிடும் பழைய சிலாசாசனம் பற்றிய ஆய்வுக்கட்டுரை இது.

இதிற் காணும் ப்ரதீபகம் என்னும் விரிநூலை ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் ஆசார்யராக விளங்கிய ஸ்ரீசிதானந்தரே இயற்றினர் என்பதை நிறுவுகிறார் இக் கட்டுரையாசிரியர்.

சோழவளநாட்டில் ஸ்ரீசங்கராசார்யரின் ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யம் மற்றும் அவர்களின் வழிவந்த ஸ்ரீகாமகோடி பீடத்தின் ஆசார்யரான ஸ்ரீசிதானந்தேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ரதீபகம் என்னும் வார்த்தீகம் ஆகியன அக்காலத்தில் வெகுவாக வழங்கி வந்துள்ளமை இதனால் உணரப்படும்.

சோழர் கல்வெட்டில் பகவத்பாதீயம் சாரீரக பாஷ்யம்

டாக்டர்.குடவாயில் பாலசுப்ரமணியன்

சோழமாதேவி ஸ்ரீகயிலாயமுடையார் கோயிலில் வீரராஜேந்திர சோழன் காலத்தில் ஸ்ரீசங்கர பகவத்பாதர்களின் ப்ரஹ்ம ஸூத்ரபாஷ்யம் – பகவத்பாதீயம் என்னும் சாரீரக பாஷ்யத்திற்கு ப்ரதீபகம் ஆகிற வார்த்தீகம் வக்காணிக்கப்பட்டதைக் குறிப்பிடும் பழைய சிலாசாசனம் பற்றிய ஆய்வுக்கட்டுரை இது.

இதிற் காணும் ப்ரதீபகம் என்னும் விரிநூலை ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்தின் ஆசார்யராக விளங்கிய ஸ்ரீசிதானந்தரே இயற்றினர் என்பதை நிறுவுகிறார் இக் கட்டுரையாசிரியர்.

சோழவளநாட்டில் ஸ்ரீசங்கராசார்யரின் ப்ரஹ்ம ஸூத்ர பாஷ்யம் மற்றும் அவர்களின் வழிவந்த ஸ்ரீகாமகோடி பீடத்தின் ஆசார்யரான ஸ்ரீசிதானந்தேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகளின் ப்ரதீபகம் என்னும் வார்த்தீகம் ஆகியன அக்காலத்தில் வெகுவாக வழங்கி வந்துள்ளமை இதனால் உணரப்படும்.

ஸ்ரீசங்கர விஜயம் – 2

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கர ஜயந்தி வெளியீடு)

இளமை

மூன்றாம் வயசு முழுதும் நிரம்புமுன் சான்றோன் சங்கரன் பாஷைபல பகர்ந்தான்;

ஐந்தே ஆண்டுகள் கடக்கும் முன்னமே மைந்தனும் கற்றான் சாத்திர மனைத்துமே ;

இந்த நிலையில் தந்தை சிவகுரு

மைந்தனை விட்டு மண்ணுலகு நீத்தார்;

தனித்து நின்ற தாய்ஆர் யாம்பிகை

தனயன் தனக்குத் தந்தையு மானாள் ;

உரிய காலத்தில் உறவினர் உதவியால்

உபநயனம் செய்வித் துள்ளம் மகிழ்ந்தாள் ;

வேதாப் பியாசம் விதிப்படி செய்யவும் வேண்டிய பலப்பல வசதிகள் செய்தாள்;

மாதாவே தெய்வமென மதித்தார் சங்கரர்;

வேதாக மங்கள் ஒதுவது மானார் ;

அன்னையிடம் சங்கரர்க் களவற்ற அன்பு;

அன்பினால் அவர்செய்த அற்புத மனந்தம் ;

நோய்வாய்ப் பட்ட தாயவள் நதிக்குப்

போய்வர இயலாப் பொழுதினி லங்கே

ஆற்றைத்தம் இல்லத்தின் அருகே வாவென

ஆஞ்ஞா பித்தார் அன்னைக்கு உதவ; செல்வனின் ஆணைக்குச் செவிசாய்த் தந்நதி

தெள்ளென ஓடியது வீட்டுவா சலிலே. (2/20)

ஸ்ரீசங்கர விஜயம் – 1

ஸ்ரீசங்கர விஜயம்

பேராசிரியர்

ஆர்.விச்வனாதய்யர், எம்.ஏ., எல்.டி.,

(ஸ்ரீசங்கரஜயந்தி வெளியீடு)

முகவுரை

ஆதி சங்கரர் அடிபணிந் தேநான்

அறிவிற் சிறந்தோர் நிரம்பிய அவையில்

சச்சிதா னந்த ஸ்வரூபமே யான

சங்கரர் சரிதையை, அவர்தம் மகிமையை

அகவற் பாவில் அடியேன் நும்பால்

அறிவிற் சிறியேன் உரைக்கமுன் வந்தேன்;

அன்னப் புள்ளுக்கு அளிக்கும் பாலில்

தண்ணீர் கலந்து தாலத்தி லிட்டால்

உவந்து வந்தப் பாலைப் பருகிக்

கலந்து வைத்த நீரைத் தவிர்த்தலின்

குற்றம் குறைகள் நீவிர் காணில்

சற்றக் குறைகளை அறவே மறந்து

குணமதை மனத்தில் கொண்டுமே என்னை

மனமுவந் தேற்க வேண்டினேன் நும்மை.

நூல்

அவதாரம்

பாரோங்கு புகழ்கொள் பாரத நாட்டில் சீரோங்கும் கேரள தேசப் பகுதியில்

புண்ணியம் மிக்க காலடிப் பதியில்

அண்ணல் சிவகுரு அவர்தம் மனைவி

ஆர்யாம் பிகையெனும் அருங்குண மாது

பூரியர் இவர்செய் அரும்பெரும் தவத்தால்

முக்கண் முதல்வனே சங்கரர் என்று திக்கெலாம் வணங்கத் தோன்றி யருளப்

பெற்றோர் மகிழ்ந்தனர் ; பேரின்ப மெய்தினர் ;

உற்றார் உறவினர் உள்ளங் களித்தனர்;

பரம்பொருள் அம்சமே உருக்கொண்ட சங்கரர்

நிரம்பிய தேசுடன் விளங்கினா ராங்கே.(1/20)

ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி ..2..

ச்ருங்கேரி என்ற பெயரொட்டுடன் திகழும் பல்வேறு மடங்களின் ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி பற்றிய ஆய்வுக் குறிப்புகள் …2

ஸ்ரீவிரூபாக்ஷ மடாதிபர்களின் ஸ்ரீமுக முத்ரை – பிருதாவளி இங்கு தரப்படுகிறது.

(அ) வட்டத்துள் வட்டமான புஷ்ப முத்ரையிலுள்ள சொற்கள்:-

“ஸ்ரீவிரூபாக்ஷ”

“ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமீ”

“ஸ்ரீவித்யாசங்கர மஹீபால முத்ரா”

இதிற் காணும் பிருதங்களில் முக்ய சிலவற்றின் பொருள்:-

“வ்யாக்யான ஸிம்ஹாஸனாதிபரும், கர்நாடக ஸிம்ஹாஸனத்தை நிறுவிய, துங்கபத்ராதீரவாஸியான ச்ருங்ககிரி விரூபாக்ஷ ஸ்ரீ வித்யாசங்கர தேவரின் பாதத்தாமரைகளை ஆராதிப்பவருமான “

ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி

ச்ருங்கேரி என்ற பெயரொட்டுடன் திகழும் பல்வேறு மடங்களின் ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி பற்றிய ஆய்வுக் குறிப்புகள் (தொகுப்பு …1)

ஆந்திரம்-கர்நாடகம்-மஹாராஷ்ட்ரம் ஆகிய மூன்று பிரதேசங்களிலும் “ச்ருங்கேரி” என்ற பெயரொட்டுடன் புகழுடன் விளங்கும் மடங்கள் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இந்த மடாதிபர்களின் ஸ்ரீமுக முத்ரை மற்றும் பிருதாவளி ஆகியன அனைத்தும் ஒரேமாதிரியான பெயர் மற்றும் சொற்களுடன் இருப்பது இந்த மடங்கள் யாவும் சமமான அந்தஸ்துடன் முற்காலந்தொட்டு போற்றப்பட்டு வந்துள்ளமைக்குச் சான்று பகர்கின்றன.

இத்தொகுதியில் தரப்படும் ஸ்ரீமுக முத்ரை, பிருதாவளி மற்றும் ஆய்வுக் குறிப்புகள் ஆகியனவற்றால் இந்த மடங்கள் தோன்றிய காலம், மரபு, வளர்ச்சி மற்றும் இவற்றிற்கு அந்தந்த பிரதேச மன்னர்கள் அளித்துள்ள சமமான அந்தஸ்து ஆகியன எளிதின் விளங்கும்.

மேலும் ஸ்ரீமுக பிருதாவளிகளில் ஒரே வகையினவாகக் காணப்படும் இவ்வணிகள் யாவும், தமது இருப்பிடத்தின் பெயரை முன்மையாகவும், ச்ருங்கேரி என்ற இணைப்பையும் ஏற்றுவந்துள்ள எந்த ஒரு குறிப்பிட்ட மடத்துக்கும் மட்டுமே சொந்தமானவை என்று சொல்வோரின் அறியாமையை நமக்குத் தெற்றெனப் புலனாக்கும்.

இத்தொகுப்பில் முதலாவதாக ஸ்ரீபுஷ்பகிரி ச்ருங்கேரி மடாதிபர்களின் ஸ்ரீமுக முத்ரை பிருதாவளி இங்கு தரப்பட்டுள்ளது.

“ஸ்ரீ வித்யா சங்கர”

(அ) சதுர வடிவிலான முத்ரையிலுள்ள சொற்கள் :-

“ஸ்ரீச்ருங்ககிரி ஸ்ரீவிரூபாக்ஷ – ஸ்ரீபுஷ்பகிரி ஸ்ரீஆலம்புரி – ஸ்ரீவித்யாசங்கர கரகமல-ஸஞ்ஜாத. “

(ஆ) ஸ்ரீமுக பிருதுகளில் சிலவற்றின் பொருள் :-

“வ்யாக்யான ஸிம்ஹாஸனத்தின் அதிபரும், கர்னாடக ஸிம்ஹாஸனத்தை நிறுவிய, துங்கபத்ராதீரவாஸியான, ச்ருங்ககிரி, விரூபாக்ஷ, புஷ்பகிரி, ஸ்ரீசைல, ஆலம்புரி முதலிய அனைத்து பீடங்களின் அதிபதியான ….”

ஸ்ரீசங்கரபகவத்பாதர்களும் ஹிந்துமத ஒற்றுமையும்.. 2

ஒரே ஸத்வஸ்து பல பேதங்களையும் பெயர்களையும் அடைய வேண்டுமென்றால் அது எப்படி முடியும் ? என்பதையும் ஸ்ரீபகவத்பாதர் விளக்குகிறார். ஒரே ப்ரஹ்மம் நிர்குணம் ஸகுணம் என்று இரண்டாக உள்ளதனால், உலக ஸம்பந்தம் வரையில் ஸகுணமாகும் ; தனி ஸ்வரூபத்தில் நிர்குணமாகும் என்பதை, பாஷ்யம் முதலான கிரந்தங்களில் நிலைநாட்டியுள்ளார். இவ்வாறே ஸாங்க்ய நையாயிக தர்சனங்களை அலசிப் பார்த்தால் இவை எல்லாவற்றையும் உள்ளடக்கித் தனியாகப் பிரகாசிப்பது அத்வைதம்தான் என்பதையும் கிரந்தங்களின் வாயிலாகப் பல பிரபல பிரமாண யுக்திகளுடன் நிலைநாட்டியுள்ளார். இவ்வாறான பெருமுயற்சிகள் எல்லாமே ஹிந்துமத ஒற்றுமையை ஸ்தாபிப்பதற்குத்தான் என்பதில் ஐயமில்லை.”ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காகவும் எல்லா வழிகளிலும் ஒன்றைப் பார்ப்பதற்காகவுமே வாழ்க்கையை அர்ப்பித்தவன் என்று ஸ்ரீசங்கர பகவத்பாதர் தம்மைத் தைத்திரீய உபநிஷத் பாஷ்யத்தில் கூறிக் கொள்ளுகிறார். ” यन्मां एकयोगिनं अनेकयोगिप्रतिपक्षिणमात्थ । ஒற்றுமையை நாடும் என்னை வேற்றுமையில் ஈடுபடும் பலரின் எதிரியாக இருப்பதாகக் கூறுகிறீர்கள் ” என்கிறார்.ஸ்ரீசங்கரபகவத்பாதர் காட்டிய இந்த மனப்பான்மையை, இக் காலத்தில் உள்ள எல்லா மதத்தினரும் பின்பற்ற வேண்டும். அவருடைய மற்ற கொள்கைகளை ஒப்புக்கொள்ளாதவர்களுங்கூட இந்த ஒற்றுமை மனப்பான்மையைப் பின்பற்ற வேண்டுகிறோம்.(நன்றி: ஸ்ரீகாமகோடி ப்ரதீபம், 1969 )

ஸ்ரீசங்கரபகவத்பாதர்களும் ஹிந்துமத ஒற்றுமையும் .. 1

பாரத தேச மக்களிடம் கருணை காரணமாகவே தெய்வம் அவ்வப்போது சில பெரியோர்களை நம் நாட்டில் அவதரிக்கச் செய்து வருகிறது. அந்த மகான்கள் ஹிந்து மத ஒற்றுமைக்காகத் தம் வாழ்க்கையையே அர்ப்பித்திருக்கிறார்கள். இவ்வாறு அவதரித்த மஹான்களில் மிகச் சிறந்தவர் ஸ்ரீசங்கர பகவத்பாதர் எனக் கூறின் மிகையாகாது.

வேதத்தின் அடிப்படைப் பிரமாணத்தை முதலில் அவர் ஸ்தாபிக்க முயன்று வெற்றியும் கண்டார். வேதங்களின் பொருளை ஆராய்ந்த பெரியோர்களிடத்தில் கண்ட வேற்றுமைகளிலும் ஸ்ரீபகவத்பாதர் ஒற்றுமையைக் கண்டு, இதை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பெருமுயற்சி செய்தார்.ஹிந்து மதத்தைப் பின்பற்றுபவர்களின் வழிபாட்டு முறைகளை ஆராய்ந்து, இதில் ஆறு வழிகள் முக்கியமாக இருப்பதைக் கண்டு, இந்த ஆறு வழிபாடுகளிலும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பெயர் கொண்ட தெய்வம் காணினும் எல்லாமாக முடிவில் ஒரே தெய்வம்தான் என்ற உண்மையை அவர் மக்களிடையே பரப்பலானார்.

பல வழிபாடுகளை ஆறு வழிபாடுகளாக ஆக்கி, அவையும் ஒரே கடவுள் தத்துவத்தைத்தான் நோக்காகக் கொண்டுள்ளன என்ற பேருண்மையை ஸ்ரீசங்கரபகவத்பாதர் கண்டதனாலும், அநேக மதங்களில் இருந்த அவைதிகமான ஆசாரங்களை நீக்கி, நடைமுறையில் இந்த ஆறு மதங்களைக் கைக்கொள்ளச் செய்ததனாலும் அவருக்கு ‘ஷண்மத ஸ்தாபனாசார்யர் என்ற பிரசித்தி அவர் காலம் தொடங்கியே ஏற்பட்டது.

ஷண்மத ஸ்தாபனார்சார்யர் என்ற பெயர் அவருக்கு உள்ளதனால், அவர் ஆறு மதங்களைப் புதிதாக ஸ்தாபித்தார் என்று கொள்ளலாகாது. அவ்வாறு அவரோ அவரைப் பின்பற்றுகிறவர்களோ சொல்லவும் இல்லை. ஸ்ரீசங்கரபகவத்பாதர் தமது காலத்தில் எழுபத்திரண்டு மதங்களாகப் பிரிந்து இருந்தவற்றை ஆராய்ந்து, அவற்றில் பலவற்றைத் தள்ளியும், கடைசியாக அடிப்படையாகச் சைவம், வைஷ்ணவம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், ஸௌரம் என்ற ஆறே முக்கிய மானவை என்று தீர்மானித்தும் இவற்றைப் பரப்பலானார்.

இந்த ஆறு மத வழிபாட்டின் பெருமைகளை ஸ்ரீபகவத்பாதர் தம்முடைய கிரந்தங்களினால் நன்றாகத் தெளிவுபடுத்தி இருக்கிறார். ஆனால், பல இடங் களில் – குறிப்பாக ‘ஹரிமீடே’ ஸ்தோத்ரம் போன்றவற்றில்- “ஒரே ஸத்தான பொருளுக்குத்தான் சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, ஆதித்யன், குமாரன் என்றெல்லாம் பெயர்” என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.

(நன்றி: ஸ்ரீகாமகோடி ப்ரதீபம், 1969)