குடந்தையுள் காஞ்சி – அணிந்துரை

“..காலங்காலமாக எழுதப்பட்டு வரும் வரலாற்றில், காலத்தின் கண்ணாடியாக விளங்கும் வரலாற்றில், சில வேளைகளில் சிலரின் விருப்பு, வெறுப்புகளுக்கேற்ப பொய்மையும் மெய்ம்மைப் புனைவு கொண்டு வந்து விடுவது உண்டு. வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு (Field Research) செய்து பொய்மைகளைப் புறம் தள்ளி மெய்ம்மை மேலோங்கச் செய்ய வேண்டும்…

இந்தியத் திருநாட்டில் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கேற்ப அயலார் ஆட்சியும், அந்நியர் ஆதிக்கமும் ஏற்பட்டு நம் தொன்மைச் சமயங்களுக்கும், சமய மடங்களுக்கும் தொல்லைகள் ஏற்படத் தொடங்கின. மண்ணையும் மாண்புறு தத்துவங்களையும், மக்கள் சமுதாயத்தையும் காக்க வேண்டி நம் சமயத் தலைவர்கள் மடங்களின் இருப்பிடங்களை, வழிபாட்டிடங்களைத் தற்காலிகமாக மாற்றிச் சமயத்தையும், மடத்தையும் காத்து வந்துள்ளனர். இவ்வாறு தெய்வத் திருமேனிகளையும், தெய்வப் பனுவல்களையும் அந்நியர்களிடமிருந்து காத்து வைக்க நம் முன்னோர்கள் அரும்பாடுபட்ட உண்மை நிகழ்ச்சிகளை வரலாறு நன்கறியும். இந்நெறியில் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகளின் ஸ்ரீ மடத்துக்குரிய ஒரு மடம் குடந்தையில் உள்ளது. சமுதாயச் சூழல் காரணமாக காஞ்சி ஸ்ரீ சங்கராசார்ய மரபினர் சற்றேறக் குறைய 200 ஆண்டுகள் குடந்தையில் இருந்து சமயப்பணிகளும், சமுதாயப் பணிகளும் ஆற்றியுள்ளனர்…

அருளியல் நோக்கில் ஆதிசங்கரரால் அமைக்கப்பட்ட மடங்களுள் ஒரு சில பிற்காலத்தில் எண்ண மாற்றத்தின் காரணமாய் முதன்மை ஸ்ரீமடமான காஞ்சி மடத்தின் தொன்மைச் சிறப்பை அறியாமல் மனமாறுபாடு கொண்டனர்…

ஆதிசங்கர பகவத் பாதர் தம் இந்தியச் சுற்றுப் பயணங்களில் தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் மடங்களை நிறுவித் தம் பணியினைத் தொடரத் தம் சீடர்களை நியமித்துள்ளார். இவ்வாறு ஸ்ரீ சங்கரரால் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மடங்கள் நிறுவப்பட்டன…”

– பேரா. டாக்டர். நாகப்பா நாச்சியப்பன் அவர்களின் அணிந்துரையிலிருந்து – புலவர்.வித்வான்.வே.ம.அவர்களின் குடந்தையுள் காஞ்சி, வரலாற்றாய்வு நூல்.